Thursday, June 17, 2010

செம்மொழி மாநாடு: சென்னையில் ரயில், விமான நிலையங்களில் சிறப்பு வரவேற்பு மையங்கள்

17 Jun 2010

சென்னை, ஜூன் 16: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னையில் ரயில் மற்றும் விமான நிலையங்களில் சிறப்பு வரவேற்பு மையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தனித் தனியே 2 வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 ஷிஃப்ட் முறையில் வருவாய்த் துறை அலுவலர்கள் 9 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் தமிழ அறிஞர்கள், மாநாட்டு சிறப்பு விருந்தினர்கள், சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் அழைப்பாளர்களை சிறப்பாக வரவேற்று, அவர்களுக்கு சென்னையில் உள்ள தங்கும் இடங்கள், உணவு, பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இவர்கள் வழங்குவர். இதுதவிர அவர்களுக்கு மருத்துவ உதவி, பயண முன்பதிவு செய்யவும் இவர்கள் வழிகாட்டுவர். சென்ட்ரலில் இந்த வரவேற்பு மையத்தை தொடர்பு கொள்ள தொ.பே. எண்: 044- 25350033.
இதே போல சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம்,
பன்னாட்டு முனையம் ஆகியவற்றில் தனித்தனியே இரு வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள சிறப்பு குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளது.
கோவை மாநாட்டுக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று, தேவையான தகவல்களை அளிக்கவும், அவர்களது பயணத்தைத் தொடரவும் இந்த குழு சிறப்புப் பணியில் ஜூன் 30-ம் தேதி வரை ஈடுபடும்.
மாநாட்டு சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட இலவச விளக்கக் கையேடுகளையும் விருந்தினர்ளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Blog Archive