Monday, September 19, 2011

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில் பெயர் விடுபட்டவர்கள், பெயரைச் சேர்க்க விரும்புபவர்கள், பெயரை நீக்க விரும்புபவர்கள், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை அதை மேற்கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை நடத்த தயாராக உள்ளது.

இந்த நிலையில் இன்று வாக்காளப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான சாதாரணத் தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று

வருகின்றன. நடப்பு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்கள் வெளியிடும் பணி இறுதி நிலையில் உள்ளது.

புகைப்பட வாக்காளர் இறுதி பட்டியல்கள் 19-9-2011ல் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட உள்ளன. உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடல் குறித்தான அறிவிப்புகள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கல். திருத்தம் குறித்தான பொது மக்களின் கோரிக்கைகளை உரிய படிவங்களில் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் (வருவாய் கோட்டாட்சியர்) சமர்ப்பித்து உரிய ஆணைகள் வெளியிடப்பட்ட உடன் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலுக்கு உரிய துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை தொடர்புடைய. சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பட்டியலில் உள்ள அனைவரும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் 2011ல் வாக்கு அளிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்த விதிகளின்களின்படி, தமிழ்நாடு ஊராட்சித் தேர்தல் விதிகள் 1995ன் விதி 21 மற்றும் தமிழ்நாடு பேரு்ராட்சிகள். மு்ன்றாம் நிலை நகராட்சிகள். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள் 2006ன் விதி 19 ஆகியவற்றின்படி உரிய திருத்தங்கள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும், பொதுமக்கள் தேவைப்படின் திருத்தங்கள் குறித்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாணையத்திற்கு அனுப்புதல் கூடாது. நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தகுதியுள்ள எவரும் வாக்களிக்க இயலாதநிலை இருக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் எப்போது?

இதற்கிடையே, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பும் இன்றே வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சட்டசபை இடைத் தேர்தல் முடிந்ததும், அக்டோபர் 19 அல்லது 21ம் தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

திருச்சி மேற்கு இடைத் தேர்தல்-இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

அதிமுக சார்பில் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தியவர் மரியம் பிச்சை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ. பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மாலை 3 மணி வரை இடைவிடாமல் மனுத்தாக்கல் செய்யலாம்.

26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி போட்டியிடுகிறார். அதேசமயம், முக்கியக் கட்சியான திமுக இத்தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது.

அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டசபை இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'ட்விட்டர்' மெசேஜ் மூலம் உண்ணாவிரதத்தை அப்டேட் செய்யும் நரேந்திர மோடி!

Narendra Modi

அகமதாபாத்: 3 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது உண்ணாவிரதம் குறித்து ட்விட்டர் தளம் மூலம் உடனுக்குடன் செய்திகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மோடியின் உண்ணாவிரதம் நேற்று 2வது நாளாக தொடர்ந்தது. இன்றுடன் முடிவடைகிறது. இவரது உண்ணாவிரதத்திற்கு பெரும் திரளானோர் திரண்டு வ்நது ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனது உண்ணாவிரதத்தை சைபர் தளத்திற்கும் கொண்டு சென்று உலகம் முழுவதும் பரப்பி வருகிறார் மோடி. அவருக்கென்று பிரத்யேகமாக ட்விட்டரில் ஒரு கணக்கு உள்ளது. @narendramodi என்ற அவரது ட்விட்டர் கணக்கு மூலம் உண்ணாவிரதம், அதன் நோக்கம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன.

அதேபோல அவரது பெயரில் உள்ள பேஸ்புக்கிலும் இந்த செய்திகள் அப்டேட் செய்யப்படுகின்றன. அந்த பேஸ்புக்கின் பக்கங்களில், “Sadbhavna Mission” மற்றும் “Narendra Modi for PM” என்ற வாசகங்கள் பிரதானமாக உள்ளன.

மேலும், 022-61550770 என்ற கட்டணமில்லாத தொலைபேசி சேவையையும் ஏற்படுத்தி அதில் மிஸ்ட் கால் கொடுத்து ஆதரவு தெரிவிக்கச் சொல்கின்றனர். இந்த எண்ணை எஸ்எம்எஸ் மூலம் நாடு முழுவதும் மோடியின் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.

மொத்தத்தில் அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு இணையான பரபரப்பையும், பிரபலத்தையும் அனைத்து வழிகளிலும் ஏற்படுத்த மோடியும், அதன் ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர்.
NIFTY FUTURES INTRADAY LEVEL FOR 19/09/2011
RES I 5046 RES II 5070
SUP I 5042 SUP II 5019

Blog Archive